காலிறுதியில் அசத்துமா இளம் இந்தியா | ஜனவரி 27, 2020
போட்செப்ஸ்ட்ரூம்: உலக கோப்பை (19 வயது) காலிறுதியில் (ஜன. 28) இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடக்கவுள்ள முதல் காலிறுதியில் (ஜன. 28) இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஜெய்ஸ்வால் நம்பிக்கை: லீக் சுற்றில் இலங்கை, ஜப்பான், நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய இந்திய அணி, 100 சதவீத வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது. ‘பேட்டிங்கில்’ யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (145 ரன்) நம்பிக்கை அளிக்கிறார். இலங்கை, நியூசிலாந்துக்கு எதிராக அரைசதம் கடந்த இவர், மீண்டும் நல்ல துவக்கம் தரலாம். திவ்யான்ஷ் சக்சேனா (75), கேப்டன் பிரியம் கார்க் (56), துருவ் ஜூரெல் (52), திலக் வர்மா (46) கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
‘பவுலிங்கில்’ சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் அசத்துகிறார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் அதர்வா, வலது கை விரலில் காயமடைந்திருப்பது பின்னடைவு. வேகப்பந்துவீச்சில் கார்த்திக் தியாகி (5 விக்.,), ஆகாஷ் சிங் (4) பலம் சேர்க்கின்றனர்.
சங்கா எச்சரிக்கை: ஆஸ்திரேலிய அணிக்கு ‘பேட்டிங்கில்’ ஜாக் பிரேசர்–மெக்குர்க் (118 ரன்), மெக்கன்சி ஹார்வி (85) ஆறுதல் தருகின்றனர். சுழற்பந்துவீச்சில் இந்திய வம்சாவளி தன்வீர் சங்கா மிரட்டுகிறார்.